ஆசிரியை கழுத்தை அறுத்து கொன்றவர் தூக்கிட்டு தற்கொலை...!

By vinoth kumarFirst Published Feb 24, 2019, 1:14 PM IST
Highlights

கடலூரில் ஒருதலைக்காதலால் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ரம்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடலூரில் ஒருதலைக்காதலால் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ரம்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கடலூர் குறிஞ்சிப்பாடியில் சேர்ந்த ஆசிரியை ரம்யா நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த அந்த நபர் ரம்யாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே ரம்யா உயிரிழந்தார். இதை கண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒரு தலைக் காதலால் ரம்யா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விருதைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் ரம்யாவை ஒரு தலையாக காதலித்ததாகவும், அவரது பெற்றோரிடம் சென்று பெண் கேட்டதாகவும் தகவல் வெளியானது. ராஜசேகருக்கு ரம்யாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரும் தொடர்ந்து ரம்யாவை தொந்தரவு செய்த ராஜசேகர், அவர் கிடைக்காத விரக்தியில் அவரை கொலை செய்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். 

இந்நிலையில் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

click me!