மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டு படம் வரைந்த ஆசிரியர்; அரசுப் பள்ளிகளை காப்பாற்ற புதுமுயற்சி...

By Suresh ArulmozhivarmanFirst Published Sep 4, 2018, 11:13 AM IST
Highlights

"அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்" என்று வாசகத்துடன் கூடிய டாக்டர். ராதாகிருஷ்ணன் படத்தை மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி வரைந்து மக்கள் மற்றும் அரசிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் இந்த பகுதிநேர பள்ளி ஓவிய ஆசிரியர். 
 

விழுப்புரம் 

"அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்" என்று வாசகத்துடன் கூடிய டாக்டர். ராதாகிருஷ்ணன் படத்தை மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி வரைந்து மக்கள் மற்றும் அரசிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் இந்த பகுதிநேர பள்ளி ஓவிய ஆசிரியர். 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர், மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவர் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 

பலவிதமான ஓவியங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவரது வழக்கம். அதன்படி, நேற்று இவர், பிள்ளையார்பாளையம் அரசு பள்ளி வளாகத்தில் இருக்கும் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு ஓவியம் ஒன்றை வரைந்து மக்களுக்கும், அரசுக்கும் ஓர் செய்தியை தெரிவித்துள்ளார்.

அது என்னவென்றால், "அரசுப் பள்ளிகளைக் காப்போம்" என்பதுதான்ன். ஆம். அரசுப் பள்ளிகளை காப்போம் என்று வாசகத்தை எழுதி அதில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்தையும் வரைந்துள்ளார். இவை அனைத்தையும் அவர் மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி வரைந்ததுதான் வியப்பு.

ஓவிய ஆசிரியரின் இந்த செயல் அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை கவர்ந்தது. இதுகுறித்து ஆசிரியர் செல்வம், "இதுபோன்று பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறேன். அதன்படி, வருகிற 2020-ஆம் ஆண்டுக்குள் உலக சாதனை புரிய வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டுள்ளேன்" என்று கூறினார். 

click me!