சிவகங்கை
சிவகங்கையில் சாராயம் குடித்துவிட்டு குடிபோதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் அங்குள்ள அறையில் தரையில் படுத்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது பூவந்தி ஊராட்சி. இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் ரஜினிகாந்த் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் 1 மணியளவில் பள்ளி நேரத்தில் வெளியே சென்றுவிட்டு சாராயம் குடித்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளார்.
பின்னர், அந்த பள்ளியில் உள்ள ஓய்வறையில் ரஜினிகாந்த் குடிபோதையில் கீழே படுத்து ஓய்வெடுத்தார். இதனையடுத்து அந்தப் பள்ளியில் இருந்த மாணவ - மாணவிகள் இதுகுறித்து அந்த கிராம மக்களிடமும், மற்ற ஆசிரியர்களிடமும் தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி(பொறுப்பு) ஷகிதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) சூரன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், குடிபோதையில் தரையில் படுத்திருந்த உடற்கல்வி ஆசிரியர் ரஜினிகாந்த் மீது தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைக்கும் முயற்சியும் நடந்தது,
ஆனாலும் 3 மணி நேரம் கழித்தும் அவருக்கு போதை தெளியவில்லை. இதையடுத்து பள்ளி மாணவ - மாணவிகளை மற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பினர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஷகிதா, "மாணவ - மாணவிகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய உடற்கல்வி ஆசிரியர் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு வந்தது கடும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.