விடுமுறை நாள்களிலும் வரி செலுத்தலாம் - சிறப்பு சலுகை கொடுத்த நகராட்சி ஆணையர்...

First Published Mar 29, 2018, 8:18 AM IST
Highlights
Tax pay on holiday days - municipal commissioner gave special privilege ...


பெரம்பலூர்
 
பெரம்பலூரில் நகராட்சி மன்றத்திற்கு மக்கள் செலுத்த வேண்டிய வரிகளை 29 முதல் 31 வரையான மூன்று விடுமுறை நாள்களிலும் செலுத்தலாம் என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஸ்ரீபிரகாஷ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், பாதாள சாக்கடை வைப்புத்தொகை மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக மக்கள் நகராட்சிக்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அவ்வாறு செலுத்தாதவர்கள் சொத்துகளின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரப்படும். மேலும் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும். 

நகராட்சி கடைகளை குத்தகை எடுத்துள்ளவர்கள் ஆண்டு குத்தகை தொகையை உடனே செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு குத்தகை தொகையை செலுத்தாதவர்களின் கடை உரிமம் ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் நலன்கருதி தெப்பக்குளம் அருகே உள்ள பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி அலுவலகத்தில் விடுமுறை நாள்களான மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை), புனித வெள்ளியையொட்டி நாளை (வெள்ளிக் கிழமை) மற்றும் வாரவிடுமுறை நாள்களான சனிக்கிழமை உள்பட மூன்று விடுமுறை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் செய்யப்படும். 

மேலும், பெரம்பலூர் மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை வருகிற 31-ஆம் தேதிக்குள் செலுத்தி நகராட்சி நிர்வாகம் சீராக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். 

மக்கள் வரி மற்றும் குத்தகை இனங்களை தவறாமல் செலுத்தும் பட்சத்தில் மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி மற்றும் தெருவிளக்கு வசதி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் செய்து தர இயலும்" என்று அவர் அதில் கூறியுள்ளார்.  

click me!