நாளைக்கு சரக்கு கிடைக்காது குடிமகன்களே... டாஸ்மாக் கடைகளை மூட திடீர் உத்தரவு..!

By vinoth kumarFirst Published Jan 29, 2019, 1:42 PM IST
Highlights

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த ரத்தீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் வசித்து வரும் விளவங்கோடு பகுதியில் இருக்கும் மதுக்கடை ஒன்று பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருப்பதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

மேலும் ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள மதுகடைகளை நாளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் ரத்தீஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் எதிர்மனுதாரராக மதுவிலக்கு ஆயப்பிரிவு உள்துறை செயலாளரை சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி அன்று மதுக்கடைகளை விடுமுறை விடப்படும். அப்படியிருக்கும் போது நாளை காந்தியின் நினைவு தினம். அன்றும் மதுக்கடைகள் மூடப்படுவமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பி்த்தனர். மேலும், மதுக்கடைகள் மூடியது தொடர்பான அறிக்கையை வருகிற 18-ம் தேதிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

click me!