
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் 38 அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்படுகின்றன.
மாணவர்களின் ரோபோட்டிக்ஸ் சார்ந்த தொழில்நுட்பத் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படும் திறனை கற்றுக்கொள்ளவும், படைப்பாற்றலை மேம்படுத்தவும் இந்த ஆய்வகங்கள் உதவும்.
கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள டி.நல்லிகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி என இரண்டு பள்ளிகள் இந்த ஆய்வகங்கள் அமைப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பள்ளியின் ஒரு வகுப்பறையில் இந்த ஆய்வகம் அமைக்கப்படும். சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஆய்வகத்தைப் பார்வையிடவும் பயன்படுத்திக்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், ரோபோட்டிக்ஸ் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்த ஆய்வகங்களில் இடம்பெறும்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளன" என்று தெரிவித்தனர்.