வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் கிராமங்கள்; தமிழக - கேரளா போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு;

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 17, 2018, 8:10 AM IST
Highlights

கோயம்புத்தூரில் பலத்த மழை பெய்து வருவதால் பொள்ளாச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கோயம்புத்தூரில் பலத்த மழை பெய்து வருவதால் பொள்ளாச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக - கேரளா இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று பொள்ளாச்சி உதவி ஆட்சியர் தெரிவித்துள்ளார். பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சிற்றோடை, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

அடித்த சூறாவளிக் காற்றுக்கு பொள்ளச்சி சக்தி விநாயகர் கோயில் அருகேவுள்ள தனியார் இணையதள கோபுரம் சரிந்தது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், செட்டிப்பாளையம், முத்துக்கௌண்டனூர், பாலார்பதி சாலை, ஆதியூர், ஜமீன்காளியபுரம், குப்பாண்டகௌண்டனூர், சொக்கனூர் ஆகிய பகுதிகளி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனைப் பார்வையிட்ட கிணத்துக்கடவு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மக்களை தண்டோரா போட்டு எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நீர்நிலைகள் அருகில் நின்று செல்போனில் படம் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

வெள்ளப்பெருக்கு குறித்து பொள்ளாச்சி உதவி ஆட்சியர், "வரட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஜமீன்காளியாபுரம் முதல் கேரளாவுக்கு செல்லும் சாலை, பெரும்பதி - முத்துக்கௌண்டனூர் சாலை, கானல்புதூர் - கேரளா செல்லும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்"  என்றுக் கேட்டுக் கொண்டார் உதவி ஆட்சியர்.

மேலும், கனமழையால் சொக்கனூர் கிராமத்தில் உள்ள பாலங்களில் தண்ணீர் செல்கிறது. எனவே, பொதுமக்கள் பாலங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் பொள்ளாச்சி பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

click me!