தமிழ் பாடநூல்கள் அச்சிடும் பணியில் முறைகேடு ? பாடநூல் கழகம் அவசர கடிதம்

By Thanalakshmi VFirst Published Dec 19, 2021, 7:53 PM IST
Highlights

உலகளாவிய டெண்டர் கோரி ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும் என்ற அரசாணையில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வழங்க இயலும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்திருக்கிறது.
 

தமிழகம் முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான புத்தகங்கள் ஆந்திராவில் டெண்டர் விடுவதாக அண்மையில் செய்தி வெளியானது. மேலும் பள்ளி பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணிகள் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், தங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு புத்தகம் அச்சிடுவோர் சங்கம் தெரிவித்தனர். இதற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் விளக்கம் அளித்துள்ளது. 

அந்த விளக்கத்தில், “பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள 8 கோடி புத்தகங்களுக்கான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு இல்லை. அரசின் உத்தரவுப்படி உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. உலகளாவிய டெண்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுடன், பிற மாநிலத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அதன்படியே ஆந்திரா, கர்நாடகா அச்சகங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது உலகளாவிய டெண்டர் கோரி ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும் என்ற அரசாணையில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வழங்க இயலும். எனவே, அரசாணையில் திருத்தம் வேண்டி அரசுக்கு பாடநூல் கழக தலைவர் லியோனி கடிதம் எழுதி உள்ளார். கடிதத்துக்கு பதில் கிடைத்த உடன், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முந்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு புத்தகம் அச்சிடுவோர் சங்கத்தினர், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், வினா வங்கி, இதர கையேடுகள் என ஆண்டு தோறும் சுமார் 8 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. வழக்கமாக புத்தக அச்சிடுதல் பணிகள் தமிழகத்தைச் சேர்ந்த அச்சகங்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு 50 சதவீதத்துக்கும் மேலான புத்தக அச்சிடுதல் பணி ஆந்திரா உட்படவெளிமாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகப் பாடப்புத்தகங்களை வெளிமாநிலங்களில் கொடுத்து அச்சடிப்பதன் மூலமாக போக்குவரத்து செலவு பலமடங்கு அதிகரிக்கிறது. இதனால் அரசுக்கு ரூ.6 கோடி முதல் 7 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது என்றனர்.

மேலும் துறைசார்ந்த சில உயர் அதிகாரிகள் தங்களின் சுயலாபத்துக்காக தவறான தகவல்களை அரசுக்கு தெரிவித்து,புத்தகம் அச்சிடும் பணிகளை அண்டை மாநிலங்களுக்கு மடைமாற்றி வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி பாடநூல் அச்சிடும் பணியை உள்ளூர் அச்சகங்களுக்கு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என கூறினார். இந்நிலையில் இதற்கு  உலகளாவிய டெண்டர் கோரி ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும் என்ற அரசாணையில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வழங்க இயலும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

click me!