காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழக எம்.பி.கள் பாராளுமன்றத்தில் போராடுவது ஏற்றுகொள்ள முடியாது  - தமிழிசை சௌந்திரராஜன்

First Published Mar 7, 2018, 1:42 PM IST
Highlights
Tamil Nadu MPs can not accept the fight in Parliament to set up Cauvery Management Board - Tamilnadu


திருநெல்வேலி

 

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக எம்.பி.கள் பாராளுமன்றத்தில் போராடுவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.

 

திருநெல்வேலியில்  தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

அதில், “தமிழ் தாமரை யாத்திரை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கட்சியினர் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம்.

 

நான் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அந்த பகுதி மக்களின் பிரச்சனைகளை குறித்து ஆலோசனை நடத்தி, அந்த பிரச்சனைகளை மனுவாக தயாரித்து முதலமைச்சரிடம் கொடுக்க உள்ளோம்.

 

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை வெள்ளநீர் கால்வாய் திட்டம், மானூர் பெரியகுளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்த திட்டம், திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில் விழாக்களில் இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக தயாரித்து முதலமைச்சரிடம் கொடுக்க உள்ளோம்.

 

தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகளுக்கு மாற்றுசக்தியாக பாரதீய ஜனதா கட்சி திகழும். இது வருகிற தேர்தல்களில் எதிரொலிக்கும்.

 

ரஜினி பேசும் போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதை நான்தான் நிரப்ப உள்ளேன் என்று கூறினார்.

 

நான் கூறுகிறேன் இந்தியாவில் 22 மாநிலங்களில் ஆட்சி செய்கின்ற பாரதீய ஜனதா கட்சி தான் ரஜினி கூறிய வெற்றிடத்தை நிரப்பும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது.

 

தமிழக அரசு மக்களுக்கு நன்மை செய்தால் அதை பாராட்டுவோம். தவறு செய்தால் அதை எதிர்த்து குரல்கொடுப்போம்.

 

தமிழகத்தை எதிர்கட்சிகள் போராட்டகளமாக மாற்ற நினைக்கிறார்கள். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளது என்றோம். இதை முதலமைச்சர் ஆட்சியர் மாநாட்டில் சரி செய்யவேண்டும் என்று கூறி உள்ளார். இது வரவேற்கத்தக்கது.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அனைத்து வேலைகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. ஆரம்பக்கட்ட பணிகளை செய்து விட்டது.

 

ஆனால், தி.மு.க. காவிரி பிரச்சனையை தவறாக கையாண்டு வருகிறது. காவிரி பிரச்சினையில் அரசியல் செய்கிறார்கள். தமிழக பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி நடந்து வருகிறது இதற்காக தமிழக எம்.பி.கள் பாராளுமன்றத்தில் போராடுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

இவ்வாறு தமிழிசை சௌந்திரராஜன்  கூறினார்.

click me!