
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், இலங்கை காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளது என குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்துள்ளதாகவும். அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீனவர்களை விடுக்க நடவடிக்கை தேவை
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யும்படி முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளர்.
நிரந்தர தீர்வு எப்போது?
இப்படியாக நமது மீனவர்கள் கைதுசெய்யப்படும்பொதெல்லாம் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அமைசச்ர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவதும், ஜெய்சங்கர் இவருக்கு பதில் கடிதம் எழுதுவதும் வழக்கமாகி விட்டது. ஆனால் மீனவர்கள் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. ஆகவே வெறும் கடிதம் எழுவதை மட்டும் வேலையாகக் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.