E PASS : உதகை சோதனை சாவடியில் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு.! இ- பாஸ் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது

By Ajmal KhanFirst Published May 10, 2024, 1:17 PM IST
Highlights

நீலகிரி மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் முறை கடந்த 7 ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் கல்லாறு  இ பாஸ் சோதனை சாவடியில் தமிழக அரசு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். 

கூட்டத்தை கட்டுப்படுத்த திட்டம்

ஊட்டி,கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு கோடைகாலங்களில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் குளு குளு பிரதேசங்களான ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பகுதிகளுக்கு தேடி செல்கின்றனர். இது அந்த மலைப்பிரதேசங்களில் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி அதனை கட்டுப்படுத்த கொரோனா காலத்தைப் போல இ பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 7 ம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையில் இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. 

இ பாஸ்- தலைமை செயலாளர் ஆய்வு

அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் இபாஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இ பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி இபாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லி வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி இ பாஸ் எடுத்து பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா  மேட்டுப்பாளையம் கல்லாறு தூரி பாலம் அருகே செயல்பட்டு வரும் சோதனைச் சாவடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வணிகர்களுக்கு பாதிப்பு இல்லை

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ பாஸ் நடைமுறை மிகவும் எளிமையாகவும் எளிதாகவும் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு தடையின்றி எளிதாக இ-பாஸ் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் வேண்டி பதிவு செய்த உடனே பயணிகளுக்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இ.பாஸ் தொடக்க நாளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதியில் உள்ள வணிகர்கள் தங்களது தொழில் பாதிக்கப்படும் என்று அச்சமடைந்தனர். ஆனால் இ பாஸ் சுற்றுலா பயணிகளுக்கு எளிதாகவும் உடனடியாகவும் இ பாஸ் கிடைப்பதால் தற்போது வணிகரீதியாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை  என்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறினார்.

click me!