
வரும் நிதியாண்டு இக்கட்டாக, நிச்சயமற்ற தன்மைகொண்டதாக இருக்கும் என்பதால், 10அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்களை குறிப்பிட்டிருந்தாலும் 10 முக்கிய அம்சங்களை கருத்தில்கொண்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிடிஆர் தெரிவித்தார். அவர் பேசியதாவது:
வரும் நிதியாண்டு இக்கட்டான , பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம். உக்ரைன்-ரஷ்யா இடையே நடக்கும் போரால் உலகளவில் பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்புள்ளது. இதனால், உலகளாவிய தேவையிலும், சப்ளையிலும் பாதிப்பு ஏற்படலாம் இது மாநிலப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பணவீக்கம், வட்டிவீதம் அதிகரிக்கும் என பெரும்பாலான பொருளதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
அகவிலைப்படி ஏற்றப்பட்டது, தமிழக மின்சார பகிர்மான கழகத்தின் முழு இழப்பை தாங்கியதால் ஏற்படும் விளைவையும் அரசு தாங்க வேண்டியதிருக்கும். இத்தகைய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு, வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டங்களுக்கு நிதி வழங்கி போதிய நிதி வழங்கி வளர்ச்சிக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் 10 விதமான அம்சங்களுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம்
1. வேளாண்மை உள்ளிட்ட முதன்மை துறைகளின் வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல்
2. சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல்
3. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்துவதன் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைபெறும் திறனை வளர்த்தல்
4. புதிய முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்கெனவே இருக்கும் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்துதல் போன்றவை மூலம், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
5. கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டின் மூலம் மகளிர் முன்னேற்றம்
6. விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் சமூக பொருளாதாரத்தை முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்துதல்
7. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் வறுமையை ஒழித்தல்
8. சமூகத்தின் அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டுதல்
9. தரவுகள் அடிப்படையில், நிர்வாக அடிப்படையில் மக்களுக்கு மானியங்களும், சேவைகளும் முழுமையாக சென்றடைய உறுதி செய்தல்
10. சுற்றுச்சூழலி்ல் நீடித்த நிலைத்தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையிலான சமத்துவத்தை உறுதி செய்தல்
முதல்வரின் முகவரி
தொகுதியையும், முதல்வரின் தனிப்பிரிவையும், முதல்வர் துறையையும் இணைத்து முதல்வர் முகவரி உருவாக்கப்பட்டது. இந்தத் துறையின் கீழ் இதுவரை 10 லட்சத்து 1883 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
இவ்வாறு பழனிவேல்ராஜன் தெரிவித்தார்