
திருநெல்வேலி
பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் தாமிரபரணி சிந்தனைப் பள்ளி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு தமிழ் அமைப்புகள் சேர்ந்து, ‘தாமிரபரணி சிந்தனைப் பள்ளி’ என்ற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பு திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாமிரபரணி சிந்தனை பள்ளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். ராஜ்ய மள்ளர் கட்சியின் மாநில தலைவர் எம்.சி.கார்த்திக், இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
மீனவர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குனர் அமீர் அப்பாஸ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர், விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் முத்துவளவன்,
ஆதி தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.