எஸ்.சி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுங்கள்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published May 30, 2022, 2:59 PM IST
Highlights

எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18% குறைவாக  உள்ள  பள்ளிகளில் ஆய்வு நடத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பட்டியலின மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதம் குறைவாக இருப்பதாக சென்னை மாவட்டம்‌, விருகம்பாக்கத்தைச்‌ சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும்,  முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான கிருத்துதாஸ் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டில்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை விகிதம்‌, பொதுக் கல்வி விகிதத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது என்பது மாநிலத்துக்குப்‌ பெருமை. தமிழ்நாட்டில்‌, தனியார் பள்ளிகள் உட்பட்ட 13 ஆயிரம் பள்ளிகளில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 20 சதவீததுக்கு மேலுள்ளது. சில ஆயிரம்‌ பள்ளிகளில்‌ 50 சதவீதத்துக்கு மேலுள்ளனர்‌.

ஆயினும்‌ வேறு 10,000 பள்ளிகளில்‌ எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்துக்குக்‌ கீழாகவே உள்ளது. 1,000 பள்ளிகளில்‌ இது 5 சதவீதத்துக்குக்‌ குறைவாகவும்‌, 100 பள்ளிகளில்‌ 0 சதவீதமாகவும்‌ உள்ளது. இதுப் பற்றிய புள்ளி விவரங்களை 2005 முதல்‌ அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வந்தும்‌ இது பற்றிய ஆய்வு ஏதும்‌ மேற்கொள்ளப்பட்டதாகத்‌ தகவல்‌ இல்லை. தற்போதாவது எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்துக்கு குறைவாக உள்ள பள்ளிகளில்‌ ஆய்வை மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்து, மாணவர்களின் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

இவரது கோரிக்கையை பரிசீலித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர், இதுகுறித்த உரிய  ஆய்வு நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவு கடிதத்தில், கிருத்துதாஸ் காந்தி என்பவரிடமிருந்து பெறப்பட்ட  மனுவில்‌, அரசுப்‌ பள்ளி உட்பட சில ஆயிரம்‌ பள்ளிகளில்‌  எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்துக்குக் கீழாகவும், 1000 பள்ளிகளில்‌ 5 சதவீதத்துக்குக் குறைவாகவும்‌ உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்துக்குக் குறைவாக உள்ள பள்ளிகளில்‌ ஆய்வு மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்து அவர்களின் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!