சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஸ்வாதி கொலையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்வாதியின் தந்தை கோபாலகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், ராம்குமார் சிறையில் இருந்த மின்வயரை வாயால் கடித்து, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயசுபஸ்ரீ புரடெக்ஷன் சார்பில் எஸ்.கே.சுப்பையா, ஸ்வாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கிறார். விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.பி.ரமேஷ்செல்வன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு‘ஸ்வாதி கொலை வழக்கு’ என பெயரிடப்பட்டுள்ளது.
‘ஸ்வாதி கொலை வழக்கு’ படத்தில், ஸ்வாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து ராம்குமார் சிறையில் இறந்தது வரை நடந்த சம்பவங்களை எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனை சிறிதும் கலக்காமல் அப்படியே படமாக்குகிறோம் எனவும், இதற்காக, இதில் தொடர்புடைய நபர்கள், போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, விவரங்களை திரட்டி திரைக்கதை அமைத்து இருக்கிறோம் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி, சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
படம் வெளியானால் தனது குடும்பத்தினர் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் எனவும் தங்களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.