கமிஷனர் அலுவலக மாடியில் ஏறி நின்று மிரட்டிய அதிமுக தொண்டர்

First Published Dec 26, 2016, 10:22 AM IST
Highlights


சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் அறைக்கு மேலே 9வது மாடிக்கு சென்ற அதிமுக தொண்டர் ஒருவர், அங்கிருந்து கீழே குதிக்கபோவதாக போலீசாரை மிரட்டினார். பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரியில் அமைந்துள்ளது. 8 மாடிகளை கொண்ட இந்த அலுவலகத்தின் 8வது மாடியில் கமிஷனர் அறை உள்ளது. சிஐபி போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டது இந்த கமிஷனர் அலுவலகம்.

சாதாரணமாக பார்வையாளர்கள் உள்ளே செல்ல முடியாது. பார்வையாளர்களுக்கு என தரை தளத்தில் அனுமதி பெற்ற பின்னரே, பொதுமக்கள் புகார் பிரிவுக்கு செல்ல முடியும். முதல் 2, 3 தளங்களுக்கு மட்டுமே புகார் தாரர்கள் செல்ல முடியும். அதற்கு மேல் உள்ள தளங்களில் போலீஸ் உயர் அதிகாரிகள் இருப்பதால், சம்பந்தப்பட்ட போலீசார் மட்டுமே, அல்லது அனுமதி பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த செந்தில் என்ற அதிமுக தொண்டர், கடுமையான கட்டு காவலையும் மீறி, கமிஷனர் அறை உள்ள 8வது மாடிக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்ற அவர், அங்குள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்றார்.

ஏதேச்சையாக அங்கு வந்த காவலர்கள், அதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை கீழே இறங்கும்படி கூறினர். அதற்கு கீழே இறங்க முடியாது என கூறிய அவர், எனக்கு போராட்டம் நடத்த சேப்பாக்கத்தில் அனுமதி தரவேண்டும். அப்படி தராவிட்டால், கீழே குதித்துவிடுவேன் என கூறினார்.

பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து, படாதபாடு பட்டு கீழே இறக்கினர். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி, அவரது விபரங்களை வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!