
குடிக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட எனது மகன் தினேஷின் விருப்பப்படி இனிமேல் நான் குடிக்க மாட்டேன் என அவரது தந் உருக்கமாக கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் தினேஷ் என்ற நல்லசிவன் பிளஸ்-2 முடித்துள்ளார். நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தினேஷ் நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே பாலத்தில் தூக்குனுப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தினேஷ் நல்லசிவன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
அவர் எழுதியிருந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது மதுப்பழக்கத்தை கைவிடுமாறு தந்தைக்கு அவர் உருக்கமான கோரிக்கை விடுத்து இருந்தார். மதுக்கடைகளை மூட மத்திய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தினேஷ் நல்லசிவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது மாடசாமி தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். எனது குடிப்பழக்கதால் மகனை இழுந்துவிட்டேனே என்று கூறி கதறி துடித்தார்.
எனது மகன் குடிப்பழக்கத்தை கைவிடும்படி என்னிடம் எவ்வளவோ கேட்டுக்கொண்டான். ஆனால் என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. இப்போது டாக்டர் ஆக வேண்டிய எனது மகனை இழந்து தவிக்கிறேன். எனது சகோதரர்கள் நல்ல முறையில் அவனை படிக்கவைத்தனர்.
அவன் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும். அவனது விருப்பப்படி நான் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன். இனிமேல் குடிக்கமாட்டேன். அப்போது தான் அவனது ஆத்மா சாந்தி அடையும் என்று மாடசாமி கதறி அழுதார்..
என்னை பார்த்து மது அருந்துபவர்கள் திருந்த வேண்டும். குடும்பத்தை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாடசாமி கோரிக்கை வைத்தார்..