பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவிகள் போராட்டம்; வெயிலையும் பொருட்படுத்தாமல் முழக்கம்...

First Published Jan 23, 2018, 10:35 AM IST
Highlights
Students protest against bus tariff hike No matter the shout ...


தஞ்சாவூர்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தஞ்சாவூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பேருந்து கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியதுடன் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து "ரத்து செய் ரத்து செய் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய், ரத்து செய்யாதே ரத்து  செய்யாதே இலவச பேருந்து பாஸை ரத்து செய்யாதே! உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார். இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயச்சந்திரன், ஆய்வாளர்கள் சந்திரா, பெரியசாமி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவிகள் முழக்கங்கள் எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர். வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு வந்து, மாணவிகள் சங்க தலைவி சூர்யா மற்றும் நிர்வாகிகளை அழைத்து பேசினார்.

அந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படவே மாணவிகள்  தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்தது.

click me!