தனியார் பால் நிறுவனத்தைக் கண்டித்து மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம்…

First Published Oct 26, 2017, 8:03 AM IST
Highlights
Students and students struggle to boycott private milk company


தேனி

தேனியில், தனியார் பால் நிறுவனத்தைக் கண்டித்து மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுராபுரியில், வறட்டாறு ஓடை அருகே தனியார் பால் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து வெளியேறும் கழிவுகள் அந்த ஓடையில் கலப்பதால் இப்பகுதி வழியாக செல்லும் மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதுராபுரியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அந்த தனியார் பால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சாலை ஓரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அங்கு வந்த காவலாளர்கள் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு பள்ளிகளுக்கு சென்றனர்.

பின்னர், பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், வட்டார வளச்சி அலுவலர் ஜெகதீசன் மற்றும் ஊராட்சிச் செயலர்கள் பால் உற்பத்தி நிலையத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில், அந்த நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்படுவது தெரியவந்தது. அதனால் அந்த பால் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

tags
click me!