தஞ்சாவூர்
செங்கிப்பட்டி பகுதிக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியின் விவசாய பாசனத்திற்கு புதிய மேட்டு கட்டளை கால்வாயும், உய்யக்கொண்டான் கால்வாயும் தண்ணீர் வழங்கி வருகிறது.
இந்த கால்வாய்களில் தண்ணீர் சரிவர திறந்து விடப்படவில்லை. இதனால் செங்கிப்பட்டி பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்தாண்டு கடந்த 11–ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள புதிய மேட்டு கட்டளை கால்வாய், உய்யக்கொண்டான் கால்வாய்க்கு வந்து சேரவில்லை.
செங்கிப்பட்டி பகுதிக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து பூதலூர் ஒன்றிய திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சானூரப்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.
தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. அவை தலைவர் தண்டபாணி, துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், அய்யாராசு, மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, செயற்குழு உறுப்பினர் நாகராஜ் மற்றும் பலர் பங்கேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.