தமிழகம் முழுவதும் 1094 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு…

First Published Oct 26, 2017, 7:25 AM IST
Highlights
1094 doctors to be appointed across Tamil Nadu - Minister of Health


சிவகங்கை

இன்னும் சில நாள்காளில் தமிழகம் முழுவதும் 350 மருத்துவர்கள், 744 சிறப்பு மருத்துவர்கள் என மொத்தம் 1094 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று பூமி பூஜை மற்றும் கால்கோல் நடும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம், “சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளை ஆய்வு செய்தபோது, டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகள் அதிகமாக இல்லை.

இருப்பினும் இந்நிலையை அடுத்து டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களுக்கு கடந்த மாதம் 1113 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் பணியாளர் பற்றாக்குறை உள்ளதாக வந்த புகாரை அடுத்து, புற ஆதார முறையில் 300 லேப் டெக்னீசியன்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இவை தவிர, நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கூடுதலான படுக்கை அறைகள் கட்டவும், கட்டில், விரிப்புகள், மருத்துவ உபகரணப் பொருள்கள் வாங்குவதற்காக அந்தந்த துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு ரூ.10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

மேலும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இன்னும் சில நாள்காளில் தமிழகம் முழுவதும் 350 மருத்துவர்கள், 744 சிறப்பு மருத்துவர்கள் என மொத்தம் 1094 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

click me!