12 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி ஜனவரி 25-ல் மறியல் போராட்டம் - மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு...

First Published Jan 10, 2018, 9:55 AM IST
Highlights
Struggle on January 25 - Demonstration of 12-Point Demands - Central Trade Union Confederation


பெரம்பலூர்

பன்னிரெண்டு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி ஜனவரி 25-ஆம் தேதி பெரம்பலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சிஐடியு உள்பட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலக கூட்டரங்கில், அனைத்து சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட உறுப்பினர் செயலர் ரெங்கசாமி தலைமைத் தாங்கினார்.

சிஐடியு மாவட்ட செயலர் ஆர். அழகர்சாமி, ஏஐடியுசி தலைவர் ரெங்கராஜ், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை இணை செயலர் சுகுமார், சிஐடியு மாநில செயலர் கருப்பையன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்தக் கூட்டத்தில், "நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை கைவிட வேண்டும்.

அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

பொதுத்துறைகளை தனியாருக்கு விற்கக்கூடாது.

முறைசாரா தொழிலாளர் பாதுகாப்புக்கு ஆண்டுதோறும் ரூ. 1.5 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்.

சாலைப் போக்குவரத்து மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும்.

புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும்.

நீட் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்.

மின்துறையை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடவேண்டும்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை திரும்பப் பெற வேண்டும்" உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனவரி 25-ஆம் தேதி பெரம்பலூரில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலர் ஏ. அகஸ்டின் வரவேற்றார். மாவட்ட உறுப்பினர் துணை செயலர் செல்வராசு நன்றித் தெரிவித்தார்.

click me!