
நாமக்கல்
நாமக்கல்லில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் வெற்றிலை கொடிகள் சேதமானது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பொத்தனூர் பகுதியில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன், குமார், ரவி, ஜெகநாதன், குப்புசாமி, ராஜா, சின்னத்தம்பி, செல்வம் உள்ளிட்டோர் பயிர் செய்திருந்த வாழை மரங்கள் சேதமானது.
சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 இலட்சம் வரை இருக்குமாம். மேலும், வெற்றிலை கொடிகளும் சேதமடைந்தது.
இது குறித்து விவசாயிகள், "சூறாவளிக்காற்றில் சேதம் அடைந்த வாழை, வெற்றிலைக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.
வாழை, வெற்றிலை சேதமானது பொத்தனூர் பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.