
இராமநாதபுரம்
மக்களைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் எழுச்சிப் பயணம் வீழ்ச்சி பயணமாகதான் அமையும் என்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் பேசினார்.
இராமநாதபுரம் அரண்மனை முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெயஜோதி, மாவட்ட மாணவரணித் தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலர் எஸ்.அங்குச்சாமி வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது: “திமுக ஆட்சிக் காலத்தில் கேபிள் டி.வி. நிறுவனம் ரூ.4 கோடி நட்டத்தில் இயங்கியது. ஆனால் இன்று ரூ.200 கோடி வருவாய் கிடைக்கிறது. லாபம் மட்டும் ரூ.53 கோடி வந்துள்ளது.
இதுவரை 12 இலட்சம் 'செட்டாப் பாக்ஸ்கள்' வழங்கப்பட்டு விட்டன. மேலும் 70 இலட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வரவுள்ளன. அவற்றை வீடுகளில் நிறுவ ரூ.200 கட்டணம் செலுத்தினால் போதும். இந்த செட்டாப் பாக்ஸ்களை இலவசமாகத் தான் வழங்க வேண்டும். கேபிள் டி.வி. நிறுவனத்தினர் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னர் நமக்கு நாமே திட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். ஆனால், மக்களோ அவரையும், அவரது தந்தையையும் வீட்டுக்குத் தான் அனுப்பினார்கள்.
அதேபோல தற்போது எழுச்சிப் பயணம் என்று பெயர் வைத்துக் கொண்டு மீண்டும் மக்களை சந்திக்கப் போவதாக ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். எழுச்சிப் பயணம் வீழ்ச்சிப் பயணமாகவே அமையும்.
ஆட்சியை எப்படியாவது கலைத்து விட வேண்டும், குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும், மறைந்த பிறகும் கூட அவரால் ஆட்சியை கலைக்க முடியவில்லை.
சிலருடன் கூட்டணி சேர்ந்து கொண்டு ஆட்சியை கலைக்க முயற்சிக்கிறார். அது ஒரு போதும் நடக்காது” என்று அவர் தெரிவித்தார்.