
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' (NSNOP) திட்டத்தின் மூலம் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். நல்லுள்ளம் கொண்ட நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களின் பங்களிப்பால் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முன்னோடித் திட்டமாக, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் 19, 2022 அன்று பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தொடங்கி வைத்தார். பொதுமக்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள், மற்றும் குறு, சிறு, பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்புகளைப் (CSR) பெற்று அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தச் சாதனை குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 3, 2025) தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது:
"ஆயிரம் கோடியைத் தொட்டது #நம்மஸ்கூல்_நம்மஊருபள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி!
இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது #DravidianModel அரசு. அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது."
அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான #STEM ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்! நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள்.
இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் #NSNOP அறக்கட்டளைத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோருக்குப் பாராட்டுகள்."
இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.