
திண்டுக்கல்
தாய் இறந்துவிட்டதாக கூறி போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் மல்க தாய் புகார் அளித்தார்.
திண்டுக்கல்லை மாவட்டம், பொன்மாந்துரை அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஆச்சிமுத்து மனைவி மருதாயம்மாள் (80). ஆச்சிமுத்து கடந்த 50 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மருதாயம்மாள் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், "நான் கூலிவேலை செய்து வருகிறேன். எனக்கு வெள்ளைச்சாமி என்ற மகனும், ஆச்சியம்மாள், சின்னம்மாள் ஆகிய மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
எனது தந்தை அவருடைய சொத்துக்களை என்னுடைய பெயரில் எழுதி வைத்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது பெயரில் உள்ள சொத்தை விற்க முயன்றேன். அப்போது சொத்துகள் அனைத்தும் வேறு ஒருவருடைய பெயரில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, நான் இறந்துவிட்டதாக கூறி கடந்த 2014–ஆம் ஆண்டு என்னுடைய மகனே போலியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று எனது நிலத்தை அபகரித்துள்ளார்.
அதனை அவருடைய மகன் ஜெகநாதன் பெயருக்கு மாற்றிவிட்டு, பின்னர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்.
இதுகுறித்து மகனிடம் கேட்டபோது என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட காவலாளார்கள் விசாரணை நடத்தாமல் அலைக்கழிக்கின்றனர்.
எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும். மேலும், போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்து விற்ற மகன் மற்றும் பேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.