
கடலூர்
கடலூரில் தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த மகனும், மருமகளும் காவலாளர்களால் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி தாமரைக்குளம் கீழக்கரையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மகன் பாலமுருகன் (42). இவருடைய மனைவி தேன்மொழி (37).
பன்னீர்செல்வம் தனது மகன் பாலமுருகன் வீட்டில் தங்கியிருந்தார். தந்தை, மகன் இருவரும் புவனகிரி கடைவீதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தனர். இந்தக் கடையை நடத்துவதில் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் சாராயம் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கடை நடத்துவது தொடர்பாக தந்தை பன்னீர்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். அப்போது அங்கு வந்த தேன்மொழி, பாலமுருகனுக்கு ஆதரவாக பன்னீர்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், ஆத்திரமடைந்த பாலமுருகன் தனது தந்தையை கொலை செய்ய முடிவு செய்து அவரின் இரு கைகளையும் பிடித்து கொண்டபோது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தேன்மொழி, பன்னீர்செல்வத்தை சரமாரியாக குத்தினார்.
இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் புவனகிரி காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், பன்னீர்செல்வத்தை கொலை செய்த பாலமுருகன், தேன்மொழி ஆகிய இருவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.
தந்தையை, மகனும் மருமகளும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.