
“லக்கி முருகா 2 நாளுல நீ காலி” - அ.தி.மு.க. பிரமுகருக்கு எஸ்எம்எஸ் மூலம் கொலை மிரட்டல்
அ.தி.மு.க. பிரமுகருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போரூரை அடுத்த ராமாபுரம், பூத்தப்பேடு பகுதியை சேர்ந்தவர் லக்கிமுருகன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக பொருளாளர். உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி 151வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக இவரது மனைவி கவுரி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல், லக்கிமுருகனின் செல்போனுக்கு தேவையற்ற அழைப்புகள் தொடர்ந்து வந்தன. தேர்தல் நேரத்தில் அதனை ஒரு பொருட்டாக அவர் கண்டுகொள்ளவில்லை.
தற்போது உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லக்கிமுருகன் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், ‘‘லக்கி முருகா. 2 நாளில் நீ காலி. இது சத்தியம்’’என கூறப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி ராயலாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லக்கிமுருகனின் பாதுகாப்புக்காக அவரது வீட்டுக்கு ஒரு போலீஸ்காரரை காவலுக்கு நியமித்து உள்ளனர். லக்கி முருகன் வெளியே எங்கு சென்றாலும் அவருடன் போலீஸ்காரர் பாதுகாப்புக்கு உடன் செல்கிறார்.
மேலும் அவருக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? எனவும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.