பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அரசு சார்பில், ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரேஷன் கார்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2005ம் ஆண்டு அனைவருக்கும் ரேஷன் கார்டுகளில் உள்தாள் மட்டும் ஒட்டப்பட்டு வழங்கப்படுகிறது. இதுபோல் 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது.
இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில், முதல்வர் பழனிசாமி ஸ்மார்ட் கார்டு வழங்கி துவங்கி வைக்கிறார். ஒரு மாவட்டத்தில், தலா 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் என மாநிலம் முழுவதும் 15 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
இதில் சென்னைக்கு மட்டும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பொருள் வட்ட வழங்கல் துறை அதிகாரிகளை கேட்டபோது, ஆர்கே நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடப்பதால், சென்னைக்கு மட்டும் ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல் வினியோகம் செய்யப்படும் என்றார்.