ஆறு மாத குழந்தையை தூக்கிபோட்ட பெற்றோர்; எச்சரித்துவிட்டு குழந்தையை அவர்களிடமே கொடுத்தது போலீஸ்...

First Published Apr 4, 2018, 7:32 AM IST
Highlights
Six months baby throw by parent police warned and give baby to the parent


திருநெல்வேலி
 
நெல்லையில், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்ததால் ஆறு மாத குழந்தையை காப்பகத்தில் போட்டுவிட்டு வருமாறு பெற்றோர் கூறியதால் பையில் கொண்டுவந்தத குழந்தையை மீட்டு காவலாளர்கள் மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்தனர். 

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒரு பிளாஸ்டிக் பையை சுமந்து சென்றபோது அந்த பையிலிருந்து குழந்தை அழுகும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த மர்ம நபரை பிடித்து சோதனை நடத்தினர். 

அதில் அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் ஆறு மாத ஆண் குழந்தை இருந்தது தெரியவந்தது. அந்த நபர் குழந்தையை கடத்திச் செல்வதாக காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து காவலாளர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மர்ம நபரை காவலாளர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த முருகேசன் என தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், "அந்த குழந்தை பாவூர்சத்திரம் அருகே உள்ள மற்றொரு முருகேசன் -வேணி தம்பதியரின் குழந்தை என்பதும், அந்த குழந்தை மூளை வளர்ச்சி சற்று பாதிக்கப்பட்டிருந்ததால், ஏதேனும் காப்பகத்தில் போட்டுவிட்டு வருமாறு பெற்றோர் கூறியதால், பையில் கொண்டு வந்ததாகவும்" அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து காவலாளர்கள் நேற்று குழந்தையின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. பின்னர் காவலாளர்கள், பெற்றோரை எச்சரித்து குழந்தையை பராமரித்து, வளர்க்குமாறு அறிவுறுத்தினர்.

இதற்கிடையே அந்த குழந்தை காப்பகத்தில் இருந்து சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தது. நேற்று அங்கு சென்ற பெற்றோரிடம், குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தேவையான தொடர் சிகிச்சை அளித்து அதன்பிறகு பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

click me!