மருத்துவர் மனைவியின் கொலை வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும் – மாதர் சங்கம் வலியுறுத்தல்…

First Published Aug 19, 2017, 9:48 AM IST
Highlights
Should Honestly Investigate doctor wife Murder Case


திருவாரூர்

வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்பட்ட மருத்துவர் மனைவி திவ்யாவின் கொலை வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும் என்று  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஜனநாயக  மாதர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மன்னார்குடியில் மருத்துவர் மனைவி திவ்யா வரதட்சணைக்  கொடுமையால்  கடந்த ஜூலை 17-ஆம் தேதி கொலை செய்யப்பட்டதற்கான வழக்கு விசாரணை நேர்மையாக நடத்த வேண்டும்,

உடற்கூராய்வு அறிக்கையை வெளியிடாமல் இருப்பதை கண்டனம் தெரிவிப்பது போன்றவை வலியுறுத்தப்பட்டன,

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு ஜனநாயக  மாதர் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில், “தேசிய குற்றப் பதிவு ஆணையம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் ஒரு மாதத்தில் 21 இளம்பெண்கள் வரதட்சணை  உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இறந்து போகிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணையின் இறுதியில் 35  சதவீதம் பேர் மட்டும்தான் தண்டனை பெறுகிறார்கள்.  வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டே செல்லும் நிலை உள்ளது. இதனால் பெற்ற மகளையும் இழந்து, விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு பெற்றோர்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது.

வரதட்சணை  கொடுமை புகாரில், கணவர் மற்றும் அவரது பெற்றோரை உடனடியாக கைது செய்யக் கூடாது. தீர விசாரித்து புகாரில் உண்மைத் தன்மை கண்டறிந்த பின்தான் கைது நடவடிக்கையில் காவலாளர்கள் ஈடுபட வேண்டும் என  அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் வரதட்சணை  கொடுமையால்  பாதிக்கப்படுபவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கும் சட்ட நடவடிக்கைகள்  நீர்த்துப் போகும்.

இதனை எதிர்த்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்” என்று அவர்காள் தெரிவித்தனர்.

click me!