
கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விழுந்த விபத்து குறித்து விசாரணை செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்தபோது, பேருந்து நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதில், 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து இதுகுறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது, விபத்து குறித்து விசாரணை செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.