
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், எஸ்.ஐ.ஆர் என்பது வாக்கு திருத்தம் என்றார்கள். ஆனால் ஒரு கோடி வாக்கை நீக்குவது எப்படி திருத்தமாகும்? குறுகிய காலத்திற்குள் விடுபட்டவர்கள் யார் யார் என்பதை எப்படி கண்டறிந்து மீண்டும் சேர்க்க முடியும்? வாக்கை காப்பாற்றுவதே மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது.
களத்தில் இல்லாத (விஜய்) குறித்து நாம் பேச வேண்டியதில்லை. களத்திற்கே வராதவர்கள் களத்தை குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. விஜய் கூறிய ஈரோட்டு கட்டாப்பாரை(பெரியார்) துருப்பிடித்து விட்டது.
அதிகாரத்தை வைத்திருக்கும் கட்சிகள் தான் பணம் கொடுக்கின்றன, பிஜேபி பீகாரில் பணம் கொடுத்தது, உத்திரபிரதேசத்தில் பணம் கொடுக்கப்பட்டது. இதுபோன்று இருக்கையில் எவ்வாறு தடுப்பது? வாக்கை வாங்கிக் கொள்ளும் முறை இருக்கும் வரை மக்களுக்கான சேவை எண்ணம் இறந்து போகும். தொகுதி எவ்வளவு விலை 50 கோடி என்று நிர்ணயிக்கப்படுகிறது. மக்களுக்கு சேவை செய்து வாக்காக மாற்றுவது கிடையாது. வாக்கை பெறுவதல்ல வாக்கை வாங்குவது என்ற நிலை இருக்கும் வரை பணநாயகம் தான் இருக்கும் ஜனநாயகம் இருக்காது. அது லாப சேவை தான் மக்கள் சேவை இல்லை
திட்டங்களின் பெயரை மாற்றுவது ஆட்சியாளர்களுக்கு வாடிக்கை தான். இந்த நாட்டை விட்டு வெளியே சென்றால் காந்தியும், அம்பேத்கரும் தான் மக்களுக்கு தெரியும். பா.ஜ.க எந்த திட்டங்களுக்கும் காந்தி பெயரை வைக்கவில்லை. திமுக தேர்தல் அரசியல், விளம்பர அரசியல் தான் செய்வார்கள். படிக்கும் பள்ளியை முறையாக கட்டாதவர்கள் பல்லாயிரம் கோடிக்கு புது திட்டங்களை அறிவிக்கிறார்கள்.
அனைத்து துறைகளையும் முழுமையாக தனியாரிடம் ஒப்படைத்து விட்டார்கள். விமானம் நிறுவனம் ஒரு முதலாளியிடம் கொடுத்ததால் தான் இண்டிகோ நிறுவனத்தில் பிரச்சினை வந்து மக்கள் பாதிக்கப்பாட்டார்கள். தனியொரு முதலாளியின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக கட்டமைக்கிறார்கள். கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் தேவதைகளாக தெரிந்தார்கள் இன்று அவர்கள் தேவையற்றவர்களாக தெரிகிறார்கள்.
நாடே போராட்டக் களத்தில் இருக்கும் பொழுது நல்லாட்சி தருகிறோம் என பேசுகிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் போது எல்லா கட்சிகளும் தூய சக்திகளாகி விடுகிறார்கள். 2021 ல் திமுக விற்கு வாக்களித்து விட்டு தற்போது விஜய் திமுகவை தீய சக்தி என்கிறார். கொள்கைகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை நோட்டுக்கு தான் வாக்களிக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தவறு. அறிவார்ந்த சமூகம் இதை செய்ய கூடாது. அரசு இரு தரப்பையும் அழைத்து பேசி திருப்பரங்குன்றம் பிரச்சனையை தீர்த்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடியாக நீதிபதி உத்தரவு பிறப்பித்ததும் தவறு தான். பாபர் மசூதி போல் சிக்கந்தர் தர்கா ஆகிவிடும் என பேசுவது தேவையில்லாத கற்பனை. அது போல் நடக்காது.
விஜய்க்கு திமுக மட்டும் தான் எதிரி ஆனால் எனக்கு திமுக, அதிமுக, பா.ஜ.க, காங்கிரஸ் என நான்கு எதிரிகள். பெரியாரை சீமான் திட்டி விட்டார் என கூறி ஓட்டு கேட்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா ? பெரியார் பெயரை கூறியவர்கள் 250 வாக்குகள் தான் ஈரோட்டில் வாங்கினார்கள்.