மானிய விலையில் ஸ்கூட்டர் - இறுதி நாளில் மட்டும் 366 விண்ணப்பங்கள் பெறப்பட்டன...

First Published Feb 6, 2018, 11:11 AM IST
Highlights
Scooter at subsidized price - 366 applications received only in the last day ...


பெரம்பலூர்

பெரம்பலூரில் மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டத்தில் பயன்பெற இறுதி நாளில் மட்டும் 366 பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பணிபுரியும் மகளிர் தங்களது போக்குவரத்திற்காக இருசக்கர வாகனம் வாங்க 50 சதவித மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கு, இருசக்கர வாகனம் மானிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 5-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலகங்கள்

மற்றும் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்க நேற்று கூட்டம் குவிந்தது.

பெண்கள் பலர் கடைசி நாளில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து நீண்ட வரிசையில் நின்று அந்த அலுவலகங்களில் கொடுத்து சென்றதை காணமுடிந்தது. சிலர் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்து ஆர்வத்துடன் விண்ணப்பித்து சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன மானிய திட்டத்திற்கு 2474 பேர்விண்ணப்பித்துள்ளதாக மகளிர் திட்ட அதிகாரி தெரிவித்தார். இந்த மானிய திட்டமானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 810 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பெரம்பலூர் நகராட்சியில் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 172 விண்ணப்பங்களும், இறுதிநாளான நேற்று மட்டும் 366 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

மொத்தத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன மானிய திட்டத்திற்காக 5032 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில், உரிய ஆவணங்களுடன் இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட 2474 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன.

click me!