
கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்று எண்ணெய் கசிவினால், நிலத்தடி நீர் பதிக்கப்படுவதாகவும், எண்ணெய் கிணறு வைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். 75க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். மேலும், கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்திய வியாபாரிகள் இன்று 4வது நாளாக தொடர்ந்துள்ளனர். அதேபோல், இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ, மாணவிகள் வாயில் கருப்பு துணிகளை கட்டி கொண்டு, பள்ளிக்கு செல்லாமல் பேரணியாக ஓஎன்ஜிசி நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு அடுத்த தெருவில் திரண்டுள்ளனர்.
அங்கு பொதுமக்களுடன் பள்ளி மாணவ, மாணவிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், கச்ச எண்ணெய் கசிவு ஏற்பட்ட குழாயை சீரமைத்து, மாற்றும் பணி அங்கு நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அங்கு செல்ல முடியாதபடி 3 மாவட்டத்தை சேர்ந்த 500க்கு மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய் கிணறுகளால், கிராமத்தில் உள்ள நிலத்தடி நீர் முழுவதுமாக மாசடைந்துவிட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்துவதால், உடலில் தோல் வியாதியும், உள்ளுக்குள் பல்வேறு நோய்களும் தாக்குகிறது.
எங்களிடம் சமரசம் பேச அதிகாரிகள் அழைப்புவிடுக்கின்றனர். அதனை நாங்கள் புறக்கணிக்கிறோம். கச்சா எண்ணெய் குழாய் அமைப்பதை நிறுத்த வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தை இந்த கிராமத்தில் இருந்து அகற்ற வேண்டும். அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால், பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
போலீசார் மீது கற்களை வீசியதாக கூறி, கிராமத்தில் உள்ளவர்களை கைது செய்துள்ளனர். அதுபோன்ற சம்பவம் கிராம மக்கள் ஈடுபடவில்லை. போலீசார் மீது கற்களை வீசியவர்களை கைது செய்யாமல், அப்பாவி மக்களை கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றனர்.