கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டதால் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ளது பனை ஒசதொட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயன். இவரது மகன் பரத் (16). இவர், அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையல் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டாராம்.
இதனால், பள்ளிக்கூடத்தில் மயங்கி விழுந்த மாணவர் அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர், தருமபுரி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அஞ்செட்டி காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டதே பரத்தின் மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
பதினோறாம் வகுப்பு மாணவன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.