தமிழைக் காப்பது தமிழினத்தைக் காப்பதாகும்: ஜப்பானில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

By SG BalanFirst Published May 28, 2023, 3:20 PM IST
Highlights

ஜப்பானில் டோக்கியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ் மொழியைக் காப்பது தமிழர்களைக் காப்பதாகும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுமுறை பயணமாக ஜப்பான் நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இன்று டோக்கியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

"நீங்கள் தந்த உற்சாக வரவேற்பில் என்னையே நான் மறந்து போயிருக்கின்றேன். இதை ஒருநாளும் மறக்கமாட்டேன்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் இடையேயான தொடர்பு பற்றிக் குறிப்பிட்ட முதல்வர். "ஜப்பான் மற்றும் தமிழ் இரு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக மொழியிலாளர்கள் சொல்கிறார்கள். இரண்டு மொழிகளும் ஒரே மாதிரியான இலக்கணக் கட்டமைப்பைக் கொண்டுவை என்று சொல்லப்படுகிறது" என்றார்.

சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் பொற்கொவிடம் தமிழ் கற்ற தமிழறிஞர் சுசுமோ எழுதிய 'ஜப்பானிய மொழியின் வேர்களைத் தேடி' என்ற நூல் மொழி அறிஞர்களால் வாசிக்கப்படும் நூலாக உள்ளது என்று கூறிய முதல்வர், ஜப்பானிலும் தமிழ்நாட்டிலும் ஈமத்தாழிகளில் உள்ள எழுத்துகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமையைச் சுட்டிக்காட்டியவர் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து .? ராமதாஸ் எச்சரிக்கை

தமிழ் மொழி படைப்புகள் பல ஜப்பானில் வெளிவரக் காரணமாக இருந்த சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சோ. மு. முத்து அவர்களுக்கு ஜப்பானிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளதாக்க் கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ் மொழியைக் காப்பது தமிழர்களைக் காப்பதாகும் என்றும் தமிழர்கள் ஜப்பானிய மொழியையும் ஜப்பானியர்கள் தமிழ் மொழியையும் கற்க முயல்கிறார்கள் என்றும் சொன்னார்.

"அயலகத் தமிழர்கள் குறித்த தரவுத்தளம் ஏற்படுத்துதல், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கான சட்ட உதவி மையம் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனவரி 12ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும், "எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள். தமிழ்நாட்டுக்கு வாருங்கள். உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது. திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியத்திற்கு அடிக்கால் நாட்டியிருக்கிறேன். கடந்த கால புகழோடு, நிகழ்கால உழைப்பும் சேரட்டும்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக ஒசாகாவில் இருந்து டோக்கியோ வரை புல்லட் ரயிலில் பயணித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அதுபற்றி ட்வீட் செய்துள்ளார். "ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்!" என்று அதில் கூறியுள்ளார்.

15 லட்சம் கோடி தனியாருக்கு போகுது.! ஐயா முதல்வர் ஸ்டாலின் எதையாவது செய்யுங்க - சீமான் கொந்தளிப்பு

click me!