நாய்களை விஷம் வைத்து கொன்ற மணல் கொள்ளையர்கள்; மணல் அள்ள இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்...

By Suresh ArulmozhivarmanFirst Published Sep 3, 2018, 10:30 AM IST
Highlights

திருப்பூரில் மணல் அள்ள இடையூறாக இருந்த பத்துக்கும் மேற்பட்ட நாய்களை உணவில் விஷம் வைத்து கொன்றுள்ளனர் மணல் கொள்ளையர்கள். இதேநிலைமை நாளை எங்களுக்கும் ஏற்படும் என்று வேதனைத் தெரிவித்த மக்கள் நாய்களை கொன்ற மணல் கொள்ளையர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
 

திருப்பூர்

திருப்பூரில் மணல் அள்ள இடையூறாக இருந்த பத்துக்கும் மேற்பட்ட நாய்களை உணவில் விஷம் வைத்து கொன்றுள்ளனர் மணல் கொள்ளையர்கள். இதேநிலைமை நாளை எங்களுக்கும் ஏற்படும் என்று வேதனைத் தெரிவித்த மக்கள் நாய்களை கொன்ற மணல் கொள்ளையர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஆத்துக்கால் புதூர், நல்லகுமாரகௌண்டன் புதூர், கருக்கம்பாளையம், கௌண்டய்யன் வலசு  போன்ற பகுதிகளில் அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை படுஜோராக நடந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல் எடுக்கக் கூடாது என்று மணல் கொள்ளையில் ஈடுபடுவோரிடம் நேரடியாக எச்சரித்தும் அதற்கும் அவர்கள் மசியவில்லை. 

பின்புலத்தில் பெரிய ஆட்கள் இருப்பதால்தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதனால் அரசு அதிகாரிகளும் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை என்று புலம்பி வருகின்றனர் இப்பகுதி மக்கள். 

இதுவரை அமராவதி ஆற்றில் மட்டும் 20 அடி ஆழத்துக்கும் மேலாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. ஆற்றில் பாறைகள் தென்படும் அளவுக்கு மணலை அள்ளிவிட்டனர். இதேநிலை இன்னும் ஓரிரு மாதங்களுக்கு நீடித்தால் கூட இப்பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்படும். குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள். 

இந்த நிலையில், ஆத்துக்கால் புதூர் பகுதியில் நேற்று பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து கிடந்தன.  இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வருவாய்த் துறை மற்றும் கால்நடைத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அதிகாரிகள் இறந்த நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதா? என்று சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், "மணல் கொள்ளை அடிப்பதற்கு இடையூறாக இருப்பதால்தான் மீன்களில் விஷத்தை தடவி அதை நாய்களுக்கு கொடுத்து கொன்றுள்ளனர் மணல் கொள்ளையர்கள். 

இன்று நாய்களுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை எங்களுக்கும் ஏற்படும். எனவே, இனியாவது மணல் கொள்ளையைத் தடுத்து மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களை விஷம் வைத்துக் கொன்றவர்களை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  

click me!