
1980-களில் உதயகீதம் படத்தில் தேங்காய்ல பாம் இருக்குனு புரளியை கௌப்பி விடுவார் கவுண்டமணி
இந்த புரளி ஊர் முழுவதும் பரவி எல்லாரும் அலறி அடிச்சு ஓடுவாங்க.
30 வருஷங்களுக்கு முன்னாடி கவுண்டமனி கௌப்பி விட்ட புரளி மாதிரியான நிலைமைக்கு ஆளாயிடுச்சு இப்போ சேலம் மாவட்டம்.
சாப்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் உப்புக்கு தட்டுப்பாடு என்று யாரோ கிளப்பி விட்ட புரளியை நம்பி சேலம் மாவட்டம் முழுவதும் அதகளம் ஆகிவிட்டது.
உப்பு தட்டுப்பாடு புரளியை அடுத்து மூட்டை மூட்டையாக உப்பை வாங்கி குவிக்க தொடங்கிவிட்டனர் மொத்த வியாபாரிகள்.
இதனால் சேலம் மாவட்டம் ஆத்தூர், ஓமலூர், அஸ்தம்பட்டி, முள்ளுவாடி ஆகிய பகுதிகளில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
உப்பு கிடைக்காததால் அருகில் உள்ள நாமக்கல், கரூர், வேலூர் மாவட்டங்களுக்கு சென்று உப்பு வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர் சேலம் மாவட்ட மக்கள்.
இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் அஸ்தம்பட்டி, முள்ளுவாடி கேட் பகுதிகளில் தீவிர சோதனையில ஈடுபட்டார். அங்குள்ள மளிகை கடைகளில் உப்பு இருப்பு பற்றியும், விற்பனை பற்றியும் சம்பத் கேட்டறிந்தார்.
சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 500க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகளில் தேவையான அளவுக்கு உப்பு இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாக வேண்டாம் என்றும் சம்பத் அப்போது பேட்டியளித்தார்.
நமது மக்களும்தான் யார் எதை சொன்னாலும் நம்பும் மனப்பான்மையிலிருந்து இன்னும் மாறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டது என்னமோ உண்மைதான். அதற்கும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த முதல் நாளில் லாரி உரிமையாளர்கள் அந்த பகுதிக்கு செல்ல மறுத்ததே காரணமாகும்.
மற்றபடி தமிழகத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் உப்பு உற்பத்தியாளர்கள்.
எது எப்படியோ கவுண்டமனி சினிமாவில் சொன்னதுபோல ‘’தேங்காய்ல பாம் வைக்காம இருந்தா சரி’’.