பெண் போலீசுக்கு 2வது முறையாக வந்த ‘கொரோனா’ - அதிர்ச்சியில் காவல் துறையினர்...

By manimegalai aFirst Published Nov 20, 2021, 3:49 PM IST
Highlights

சேலம் அருகே பெண் போலீசுக்கு இரண்டாவது முறையாக ‘கொரோனா’ பாதித்திருப்பது, காவல் துறையினரிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

‘கொரோனா’ பெருந்தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டிருப்பதே, கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சேலம் அருகே பெண் போலீசுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது காவல் துறை வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சில காரணங்களால் சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சேலம் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் சந்திரகலா, அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இரும்பாலை காவல் நிலையத்தில் பணியாற்றும் போதே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதில் குணம் அடைந்த அவர் நேற்று அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்ஸ்பெக்டர் சந்திரகலா அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தின் முதல் பெண் இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பணிக்கு திரும்பிய அவருக்கு நேற்று பரிசோதனை செய்ததில் மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது  சிகிச்சை பெற்று வருகிறார். அன்னதானப்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டாவது  முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, சேலம் காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

click me!