இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில், குண்டாறு, மலட்டாற்றின் குறுக்கே ரூ.15 கோடி மதிப்பீட்டில் நான்கு தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குப் பொதுப்பணித்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
கமுதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், "இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அடுத்துள்ள காட்டுஎமனேஸ்வரம் அருகே குண்டாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்.
இதன்மூலம் பெரிய ஆணைக்குளம், வழிமறிச்சான், வங்காருபுரம், அச்சங்குளம், விரதக்குளம் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியிலுள்ள 800 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல கமுதி, நாராயணபுரம், கோட்டைமேடு, கருங்குளம் ஆகிய பகுதி விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், ரூ.4 கோடி மதிப்பீட்டிலும், கடலாடி அருகே ஏ.புனவாசல், ஆப்பனூர், சிறுகுடி, ஏ.பாடுவனேந்தல்,
கண்ணன்பொதுவன் அதனை சுற்றியுள்ள நிலங்கள் பயன்பெறும் வகையில், மலட்டாறு ஆற்றின் குறுக்கே ஏ.புனவாசல் அருகே ரூ. 4 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையும், சாயல்குடி அருகே மங்களம் பகுதியில் உள்ள மலட்டாற்றின் குறுக்கே ரூ. 4 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையும் அமைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்ததனர்.
இதன்பேரில் காரைக்குடி திட்டங்கள் வடிவமைப்பு கோட்ட பொதுப்பணித்துறையினர், திட்ட மதிப்பீட்டறிக்கை தயார் செய்து, தடுப்பணை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்" என்று அதில் தெரிவித்து இருந்தனர்.