மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2,000 நிவாரணம்? அரசு பரிசீலித்து வருவதாக தகவல்!!

By Narendran SFirst Published Nov 9, 2021, 4:00 PM IST
Highlights

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சென்னையில் கடந்த 6 ஆம் தேதி இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததை அடுத்து சாலை எங்கும் மழை நீர் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் பல இடங்களில் முதல் தளம் வரை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதுமட்டுமின்றி தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதை அடுத்து போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல அரசு அதிகாரிகள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளுக்குள் மாட்டிக்கொண்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் 2015 ஆம் ஆண்டு பெய்தது போல, சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், பல வீடுகளில் தண்ணீர் புகுந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வட்டாரங்களில் கிடைத்த தகவல்களின் படி, மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறிகையில், சென்னையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 5,000 நிவாரண தொகை செலுத்தப்பட்டது என்றும் தற்போது ஏற்பட்டு உள்ள மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து, கள நிலவரங்களை தெரிந்து உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும் அவரிடம், நிவாரண உதவிகளை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறிய அவர், எனவே, ரேஷன் கார்டு அடிப்படையில், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்கலாமா அல்லது ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை முழுதும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள் தான் உள்ளனர் என்றும் ஒவ்வொரு பகுதி வாரியாக, பாதிக்கப்பட்டவர் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்வதால், இன்னும் அந்த பணி முடிவடையவில்லை என்றும் ஒட்டுமொத்த விபரங்கள் சேகரித்த பின், நிவாரண தொகை குறித்து இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

click me!