கொரோனாவால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.50,000 வழங்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

By manimegalai aFirst Published Nov 9, 2021, 2:29 PM IST
Highlights

தமிழ்நாட்டில் நவம்பர் 8ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 36 ஆயிரத்து 200 பேர் பலியாகி இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நவம்பர் 8ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 36 ஆயிரத்து 200 பேர் பலியாகி இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உலகநாடுகளை இரண்டு வருடங்களாக ஆட்டிப்படைத்துவரும் கொரோனா இந்தியாவில் லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பல்லாயிரக்கணக்கான பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா முதல் அலையில் தப்பி பிழைந்த்த இந்தியர்கள் அலட்சியப் போக்கால் இரண்டாம் அலையில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

உலகநாடுகள் பலவற்றிலும் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அந்தந்த நாட்டின் அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் தொழில் முடக்கம் ஏற்பட்டவர்களுக்கு பண இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா இரண்டவது அலையின்போது உலக நாடுகளே இந்தியாவைக் கண்டு கண்ணீர் வடித்தபோதும், உயிர்பலிக்கோ, தொழில் நஷ்டங்களுக்கோ உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டில் திமுக தேர்தல் நேர வாக்குறுதியின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா நான்காயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதனிடையே கொரோனா உயிரிழப்புகள் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், பெருந்தொற்று காலத்தில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவார்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் இதுகுறித்து போக்கு காட்டிய மத்திய அரசு, பின்னர் கொரோனாவால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 ரூபாய் இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்தது. இதற்காக மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகளையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனிடையே, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயகோபால் என்பவர், சென்னை உயர்நீதிமண்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், பேரிடர் மேலாண்மை சட்டபிரிவு 12 உட்பிரிவு 3  கீழ் பேரிடரால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், ஒரு வாரம் சிகிச்சை பெற்றவர்களுக்கு 4 ஆயிரத்து 300 ரூபாயும் ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெறக் கூடியவர்களுக்கு 12 ஆயிரத்து 700 ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின்2016 ம் விதிமுறைகள் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், நேற்றுவரை கொரோனாவால் தமிழகத்தில் 36,200 பேர் இறந்துள்ளதாக குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.50,000 இழப்பீடு வழங்கவிருப்பதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 50 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக வழங்குவது குறித்து அரசின் கருத்தை பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

click me!