
சேலம் மாவட்டம் சாமிநாத புரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் எம்.பில் நவீன வரலாறு படித்து வந்தார்.
இந்நிலையில், முத்துகிருஷ்ணன் பல்கலை கழக விடுதியில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக, நவீன வரலாற்றுத் துறையில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக் கிருஷ்ணன் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
நான்காண்டுகள் கடும் முயற்சிக்குப் பின் பல்கலைக் கழகத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற முத்துக் கிருஷ்ணன், கல்வியிலும், எழுத்திலும் ஈடுபாடுள்ள மாணவராக இயங்கிவந்துள்ளார்.
தலித் விடுதலை அரசியலிலும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். தன்னுடைய வலைப்பூவிலும், முகநூலிலும் தொடர்ந்து எழுதி வந்த முத்துக் கிருஷ்ணன், தனது கடைசிப் பதிவில் சமநீதி மறுக்கப்படுவதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
"எம்.பில்/ஆராய்ச்சி படிப்புகளில் நுழைய, வைவாவின் போது சமநீதியில்லை. சமநீதி மறுப்புத்தான் இருக்கிறது." என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
உயர்கல்வி நிலையங்களில் தலித்/பழங்குடி மாணவர்கள் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலையை ஒட்டி, உயர் கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பற்றி கவலையோடு விவாதிக்கப்பட்டது.
ஆனால், பல்கலைக் கழகங்களில் நிலவும் சூழலை மாற்ற எதுவும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து நீதிவிசாரணை வேண்டுமென குடும்பத்தார் கோரியுள்ளனர்.
நீதிவிசாரணைக்கு உத்தரவிடுவதுடன், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென மத்திய அரசை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.