
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில், தற்கொலை செய்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலாமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் சாமிநாத புரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் எம்.பில் நவீன வரலாறு படித்து வந்தார்.
இந்நிலையில், முத்துகிருஷ்ணன் பல்கலை கழக விடுதியில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த டெல்லி போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முத்துகிருஷ்ணன் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை எனவும், அவரது முகநூல் பக்கங்களில் உள்ள தகவல்கள், தொலைபேசிக்கு வந்த தொடர்பு எங்கள் உள்ளிட்டவைகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை எனவும், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மரணமடைந்த முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.