பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்; நாம் தமிழர் கட்சியினர் உள்பட 30 பேர் கைது...

First Published Apr 25, 2018, 9:21 AM IST
Highlights
Road blockade condemning town administration arrested 30 people


புதுக்கோட்டை

புதுக்கோட்டையில், கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் உள்பட 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சுமூக தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

"கீரமங்கலம் பேரூராட்சிக்கு சொந்தமான குளத்தை நிர்வாகம் ஆக்கிரமிக்க வைத்துவிட்டது. 

அம்புலி ஆறு, ராமனேரி குளத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுகிறது. 

முறையான டெண்டர் முறைகளை கடைப்பிடிக்கவில்லை" உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், "பேரூராட்சி உயர் அதிகாரிகள் வரவேண்டும்" என்றனர். அதனைத் தொடர்ந்து பேரூராட்சிகள் துணை இயக்குநர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது சில இடங்களில் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். இதனையடுத்து பேருந்து நிலையம் அருகே பேரூராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பதாகை அகற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை கீரமங்கலம் காவலாளர்கள் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் காவலாலர்கள் விடுவித்தனர். 

click me!