
நெய்வேலியில் நவம்பர் 10-ல் நடைபெற இருக்கும் சாலை மறியல் போராட்டத்தை வெற்றபெறச் செய்வது என அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெய்வேலியில் அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிஐடியு சங்க அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சிஐடியு தலைவர் ஏ.வேல்முருகன் தலைமை வகித்தார். தொமுச தலைவர் வீர.இராமச்சந்திரன், சிஐடியு பொதுச்செயலர் டி.ஜெயராமன், டிவிஎஸ் சங்கச் செயலர் முருகன், ஏஐடியுசி செüந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வி.முத்துவேல், காங்கிரஸ் இளங்கோவன், மதிமுக மனோகர், தேமுதிக ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“தாண்டவன்குப்பம் பகுதி மக்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வழங்குவது, மந்தாரக்குப்பம் பகுதியில் சுரங்க வெடி மருந்தின் அளவைக் குறைப்பது, கெங்கைகொண்டான் பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது, நெய்வேலி நகரிய பகுதியில் 24 வழித் தடங்களில் இயக்கப்பட்ட பேருந்து சேவையை குறைத்து 5 வழித்தடங்களாக மாற்றியதை கண்டிப்பது, கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 10-ல் அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்கும் சாலை மறியல் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வது, இதற்காக நவம்பர் 5-ஆம் தேதி முதல் பகுதிவாரியாக கூட்டங்கள் நடத்துவது, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் என்எல்சி தலைவரிடம் கடிதம் அளிப்பது” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.