
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் உள்ள வத்தலக்குண்டு காளியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட பக்தர்களில் இருவர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் காளியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இந்தக் கோயிலில் உள்ள அன்னதான கூடம் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் கட்டப்பட்டிருந்தது. அதனை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனையொட்டி பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த இடத்தை சிலர், ஆக்கிரமித்து கடை வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எனினும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லையாம்.
இந்த நிலையில் பக்தர்கள் நேற்று காளியம்மன் கோயில் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதற்கிடையே மறியலில் ஈடுபட்ட பக்தர்கள் கோபி, கண்ணன் ஆகியோர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் வத்தலக்குண்டு காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இருவரிடமும் இருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர்.
இதற்கிடையே மறியலில் ஈடுபட்ட பக்தர்களிடம், காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். "சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று காவலாளர்கள் உறுதியளித்தனர்.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்படும் இடங்களை சுற்றிலும் பக்தர்கள் தகரத்தை வைத்து அடைத்தனர்.