சேலம்
சேலத்தில், பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 11 பேரை காவலாளர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலம் – சென்னை இடையே எட்டு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக விவசாயிகளின் வீடுகள், நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் என அனைத்து உடைமைகளையும் கையகப்படுத்தும் பணிகளில் அரசும், அரசு அதிகாரிகளும் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
ஒருபக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்ன்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், மாணவர்கள், சமூக நல அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மறுபக்கம் எட்டு வழி சாலை என்று வாயை திறந்தாலே கைது, போராட்டங்களை அடக்குதல், ஒடுக்குதல் என பல்வேறு அத்துமீறல்களை அரசு நடத்தி வருகிறது. இதற்கு மன்சூல் அலிகான், பியூஷ் மனுஷ், வளர்மதி போன்றோர் உதாரணம்.
காவல்துறை தரப்பிலும், மற்ற எந்த போராட்டத்திற்கும் அனுமதியை எளிதாக கொடுத்துவிடுகின்றனர். ஆனால், பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் என்றால் அனுமதி கிடையாது என்று மறுக்கப்படுகிறது. மேலும், காவலாளர்களை மீறி யாரேனும் போராட்டம் நடத்தினால் அவர்கள் அனைவரும் உடனடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், "விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பசுமை சாலைக்காக நிலம் எடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசை கண்டிப்பது,
எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்துவது" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு காவலாளர்கள் அனுமதி மறுத்ததால் அவர்கள் அனைவரையும் காவலாளர்கள் கைது செய்ய முற்பட்டனர்.
அப்போது, "பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும்" முழக்கங்களை எழுப்பினர். அதன்பின்னர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் 11 பேரை காவலாளர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.