கடனை திருப்பிக் கேட்டவருக்கு கத்தி குத்து; 7 ஆண்டு கால வழக்கில் அதிரடி தீர்ப்பு...

First Published Jul 12, 2018, 7:51 AM IST
Highlights
Knife attack who asked money back


இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கியும், கத்தியால் குத்தியும் குற்றம் புரிந்த இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ளது எட்டிசேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் மகன் வைரவராஜ் (43). இவரிடம் முதுகுளத்தூர் தாலுகா கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் முருகன் (37) என்பவர் வீடு கட்ட கடன் பெற்றுள்ளார். 

இந்தத் தொகையை வைரவராஜ் திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியது. இந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி வைரவராஜ் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது அந்தப் பக்கமாக வந்த முருகனிடம் தனக்கு சேரவேண்டிய பணத்தை கேட்டுள்ளார். அதனால் இருவக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, முருகனும் அவரது நண்பரான சண்முகவேலு என்பவரும் வைரவராஜை சரமாரியாக அடித்துள்ளனர்.

மேலும், முருகன், வைரவராஜை பின்பக்கமாக இறுக்கமாக பிடித்துக் கொண்டார். அப்போது தூரி சண்முகவேலு, வைரவராஜை கத்தியால் குத்தினார். இதனால் வைரவராஜ் பலத்த காயம் அடைந்தார். 

பிறகு அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து வைரவராஜ் கொடுத்த புகாரின்பேரில் முதுகுளத்தூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து முருகனையும், சண்முகவேலுவையும் கைது செய்தனர். 

இந்த வழக்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்குரைஞர் காமராஜ் ஆஜரானார். 

வழக்கினை முழுமையாக விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி நேற்று தீர்ப்பு அளித்தார். அதன்படி, "முருகனுக்கும், சண்முகவேலுவுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவரும் சேர்ந்து அபராதத் தொகையாக ரூ.10,500 செலுத்த வேண்டும்" எனவும் தீர்ப்பளித்தார். 

மேலும், "அபராதத் தொகை ரூ.10,500 இல் ரூ. 9500 பாதிக்கப்பட்ட வைரவராஜுக்கு கொடுக்க வேண்டும்" எனவும் "மீதத் தொகை ரூ.1000-தை அரசுக்கு செலுத்தவேண்டும்" எனவும் அவர் கூறினார்.

click me!